Wednesday, December 5, 2012

தேவை கருதித்தானாம் இராணுவம் பல்கலைக்குள் நுழைந்ததாம்; கூறுகிறார் ஹத்துருசிங்க

news
 Uthayanonline
பல்கலைக்கழகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும்   27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தேவை கருதியே இராணுவம் உள்நுழைந்ததாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பலாலியில் அமைந்துள்ள யாழ். கட்டளைத் தளபதியின் தலைமையகத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பொன்று கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

27ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில்  4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மருத்துவ பீடமாணவன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய 3 மாணவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் உள்வாங்கி அவர்களது விசாரணைகள் முடிவடைந்ததும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர்.

மேலும்  அவர்களது விடுதலை பற்றி பல்கலைக்கழக நிர்வாகம் எம்மிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளது. குறித்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி விரைவில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் சம்பவம் நடைபெற்ற தினம் இராணுவத்தினர் பல்கலைக்குள்ளே தேவைகருதி உள்ளே வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் பொலிஸாரோ அல்லது இராணுவமோ முன் அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்குள் நுழையாது. எனினும் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளரின் அனுமதியைப் பெற்றே இவர்கள் உள்ளே வருவார்கள் என்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைளுக்கு இராணுவத்தினரால் எந்த இடையூறும் ஏற்படாது. அத்துடன் பல்கலை சூழலில் இருக்கின்ற இராணுவம் மற்றும் வீதித்தடைகள் என்பன உடனடியாக அகற்றப்படும்.

அத்துடன் மாணவர்களது பாதுகாப்பில் இராணுவம் மற்றும் பொலிஸாரும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர். அதனால் வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நடைபெறக் கூடாது என விரும்புகின்றோம்.

இருப்பினும் பொலிஸார் பல்கலைக்கு அப்பால் தமது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மாவீரர் நாள் நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டவர்கள் என்று என்ற குற்றச்சாட்டில் 4 மாணவர்களையும் கைது செய்தது பொலிஸார் ஆனால் அதற்கான பதில்களைக் கூறுவது இராணுவமாக உள்ளது. இன்றைய தினம் குறித்த சந்திப்புக்கு பொலிஸ் தரப்பில் இருந்து யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.ஏன் பொலிஸ் தரப்பினர் அழைக்கப்படவில்லை என்று கேட்டதற்கு அவர்களுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றதாக கூறப்பட்டது.

அத்துடன் கைதான மாணவர்களில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன் விடுதலை செய்யப்படும் போது ஏன் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதலை செய்யப்படவில்லை? விசாரணை என்பது எதுவரை நீண்டுள்ளது? மற்றைய மாணவர்களுக்கு விசாரணை முடியவில்லை முடிந்ததும் விரைவில் விடுதலை  செய்யப்படுவர் என பொலிஸாருடைய வேலையையும் சேர்த்துச் செய்கிறார் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி.

மேலும் பாதுகாப்புக்கருதி பல்லைக்கழக சூழலுக்கு அப்பால் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நோக்கும் போது யாழில் பொலிஸாரைவிட இராணுவத்தினுடைய ஆதிக்கமே வலுவான நிலையில் உள்ளது என்பதுடன் இராணுவ ஆட்சி யாழில் உள்ளது என்ற கருத்தையும் ஆணித்தரமாக்குகின்றது.

இருப்பினும் சம்பவ தினத்தன்று இராணுவத்தினர் பல்கலைக்கழகத்திற்குள்ளோ அல்லது விடுதிக்குள்ளோ  உள் நுழையவில்லை பொலிஸாரே கடமையில் ஈடுபட்டனர் என்று கூறிய ஹத்துருசிங்க இன்று தேவை கருதியே பல்லைக்குள் இராணுவம் உள் நுழைந்தது என்ற கருத்தை தன்வாயாலேயே கூறி தான் கூறியது பொய் என நிரூபித்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு பொருத்தமானவர் கட்டளைத் தளபதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்துடன் அரசியல் தலையீடு பல்கலைக்கழகத்திற்குள் வேண்டாம் அவர்கள் அனுமதி இன்றி உள்நுழையக் கூடாது எனின் இன்றைய சந்திப்புக்கு எதற்காக இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டிருந்தார் என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே அமைகின்றது.

குறிப்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் மூன்று மணித்தியாலத்திற்கு மேற்பட்ட கலந்துரையாடல் ஊடகவியலாளர்களுக்கு 10 நிமிடம் கூட கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக் கூடிய விடயமாகும்.

இந்த சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் மட்டும் விடுதலையான பின்னணி என்ன: ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியா?
[ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 02:28.02 PM GMT ] tamilwin.net
பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்ற மாணவன் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கும் மாணவர்களை பிரித்து விடுதலை உணர்வை சிதைப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் ஒரு அலகே இந்த விடுதலையாகும்.
குறிப்பாக இந்த முயற்சிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரட்ணத்தோடு, பீடாதிபதி ஒருவர் இம்முயற்சிகளில் ஈடுபட்டடுள்ளதாக தெரியவருகின்றது.

தேசிய விடுதலையில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட மாவீரர் தினக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது சிங்கள இனவாத அரசு காட்டுமிராண்டித்தனமான இனவெறித் தாக்குதல்களை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவாகள் நால்வர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்மாணவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு துணைவேந்தர் துணை போயுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மாவீரர் தினத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்வு கூறலுடன் இருந்த அரச பயங்கரவாதம், யாழ்ப்பாணத்தில் இருந்து துணைவேந்தரை குறித்த காலப்பகுதியில் வெளியேற்றியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக துணைவேந்தரோடு பதிவாளர் உள்ளிட்ட அடுத்த பதவி நிலை அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமது பதவிகளுக்கு அஞ்சியே இவர்கள் அரச பயங்கரவாதத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது தவிர மாணவர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டிய ஒரு சில குறிப்பிட்ட போராசிரியர்கள், மாணவர்களையும் அவர்கள் தொடர்பான விபரங்களையும் புலனாய்வாளர்களுக்கு போட்டுக் கொடுப்பவர்களாக மாறியுள்ளதாகவும் மாணவர்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மேலும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பீடத்தைச் சேர்ந்த மாணவனை மட்டும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகத் குறித்த ஒரு பீடாதிபதியினால் முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் விடுதலையானதும் தமது பீட மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் மாணவர்களோடு பேரம் பேசியுள்ளார். இதன் அடிப்படையிலேயே இம்மாணவன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

தேசிய விடுதலை வித்தினை காலத்திற்கு காலம் விதைத்து ஈழத்தின் விடுதலைத் தீயினை விதைத்து வந்த பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதலை உணர்வினைக் கண்டு அஞ்சி நடுங்கும் அரசாங்கத்தின் கபடத்தனமாக ஒரு சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே இவ்விடுதலையானது அமைந்துள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் ஒற்றுமையை சிதைப்பதோடு விடுதலைக்காய் ஒன்று சேரும் உணர்வுகளையும் சக்திகளையும் பலவீனப்படுத்ம் செயற்பாடாக இது அமைகின்றது.

இந்நேரத்தில் தமது கதிரைகளுக்காக இவ்வாறான இழிவான செயலில் ஈடுபடும் அதிகாரிகள் தமது இச்செயற்பாடுகளை விடுத்து உணர்வோடு தமிழ் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

ஆனால் இதற்குள்ளும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் தேசிய உணர்வோடு பெருமளாவான விரிவுரையாளர்களும் போராசிரியாக்ளும் பணியாற்றுகின்றனர்.அவர்களில் சிலர் மாணவர்களை விடுவிக்க கோரி இன்று நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேடுத்தனர். பங்கு கொள்ள முடியாத ஏனையவர்கள் தமது ஆதரவையும் வழங்கினார்கள்.
தேசிய உணர்வுகளைச் சுமந்தவர்களாய் மாணவர்களோடு இவ்வாறானவர்கள் கரம் கோர்த்துள்ளனர். ஒரு சில நாணற் புற்களுக்கும் புல்லுருவிகளுக்கும் முன்னால் உள்ள ஆலமரங்களைப் போன்ற போராசிரியர்களின் ஒத்துழைப்புகளுக்கு தலை வணங்குகின்றோம்.